உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜை, அலங்கார
அபிஷேகங்கள் நடந்தது.

 * கோபால சமுத்திரக்கரை நன்மைதரும் 108 விநாயகர் கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர், 108 பரிவார விநாயகர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக செப்.,5ல் நடந்த வருஷாபிஷேக விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து விநாயகரை வழிபட்டனர்.
* வெள்ளை விநாயகர் கோயிலில் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு பூஜை நடந்தது.
* கோட்டை மாரியம்மன் கோயிலில் உள்ள விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
* அபிராமி அம்மன் கோயிலில் உள்ள விநாயகர் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
* கரூர் ரோட்டில் வழிவிடும் விநாயகர் கோயிலில் அருகம்புல், கொழுக்கட்டை, பூக்கள் படைத்து பூஜைகள் நடந்தது.
* மேட்டு ராஜாக்காப்பட்டியில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 12 அடி ஸ்ரீபிரம்ம விநாயகருக்கு பூஜைகள் நடந்தது.
*  திண்டுக்கல் கச்சேரி தெரு கிராம முனிசிப் சந்து ரமேஷ்குமார் - சுமதி தம்பதியினர். இவர்கள் வீட்டில் கடந்த ஐந்தாண்டுகளாக சந்தனந்தால் விநாயகர் சிலைகள் தயாரித்து சதுர்த்தி விழாவை கொண்டாடுகின்றனர். நேற்று 2 கிலோ சந்தனம், காகிதக்கூழ், மஞ்சள் துணி உள்ளிட்டவற்றை வைத்து சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது உள்ளிட்ட நவ கிரக விநாயகர் சிலைகளை தயாரித்தனர்.  மேலும் கன்னிகா பரமேஸ்வரியம்மனின் இடப்புற மடியில் வீற்றிருக்கும் விநாயகர் சிலையை சந்தனத்தால் தயாரித்துள்ளனர். பக்தர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தாயக்கட்டைகளும், பொம்மைகளும் பரிசாக வழங்கினர்.

1,100 சிலைகள் பிரதிஷ்டை: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயிரத்து 100 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.  திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயிரத்து 100 இடங்களில் மட்டுமே விநாயகர்சிலைகள் அமைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். அந்த இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  திண்டுக்கல் நகரில் 75 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  போலீசார் கூறுகையில், ‘பதட்டம் நிறைந்த பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். என்றனர். கொடைக்கானல்:  கொடைக்கானலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

நகரில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, 57 பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. கோடை இன்டர்நேஷனல் ஓட்டலில் அமைந்துள்ள வலம்புரி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஓட்டல் நிர்வாக இயக்குனர் பாண்டுரங்கன், இனை இயக்குனர்கள் தங்கவேல், ஜீவா, காயத்ரி, நகராட்சி தலைவர் ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.  பழநி:   விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பழநிமலைக்கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்புபூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர்.

பழநி மலைக்கோயில் ஆனந்தவிநாயகர், காந்திரோடு பட்டத்து விநாயகர்கோயில், வெள்ளிக்கவசம் சாத்தி சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதைப்போலவே சண்முகபுரம் தமிழ்இலக்கியமன்ற சித்திவிநாயகர்கோயில் விநாயகருக்கு சிறப்பு யாகபூஜை, அபிஷேகம் நடந்தது. விஸ்வஇந்துபரிஷத் சார்பில் கணபதிபூஜை செய்து, பல்வேறு இடங்களில் வைக்கப்படவுள்ள விநாயகர் சிலைகளை எடுத்துசெல்லப்பட்டன. குழந்தை களுக்கான விளையாட்டுபோட்டிகள், கலைநிகழ்ச்சிகள், குத்துவிளக்குபூஜை நடந்தது. இந்துமுன்னணி, சிவசேனா உள்ளிட்ட அமைப்புகளின் நுாற்றுக்கு மேற்பட்ட சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. களிமண், சுட்டமண் பிள்ளையார் சிலைகள் ரூ.50 முதல் ரூ.150 வரை உயரத்திற்கு தகுந்தால் போல் விற்பனையானது.  

ஒட்டன்சத்திரம்:  ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள விநாயகர், சித்தி விநாயகருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.  ஒட்டன்சத்திரத்தில்விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 65 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதே போல் இந்து மக்கள் கட்சி சார்பில், ஒட்டன்சத்திரம் மற்றும் ரெட்டியார்சத்திரம் பகுதியில் 27 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன.  இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள 65 சிலைகள் இன்று மாலை செக்போஸ்ட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விருப்பாட்சி தலையூற்றில் கரைக்கப்படுகிறது. இதேபோல் இந்து மக்கள் கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள 27 சிலைகளும் நாளை மதியம் 2 மணி அளவில் செக்போஸ்ட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டு, தலையூற்றில் கரைக்கப்படுகிறது.  

ஊர்வலத்தை முன்னிட்டு டி.எஸ்.பி., ராஜா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கன்னிவாடி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக பாலாபிஷேகம் செய்யட்டு, மலர்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சதுர்த்தி சிறப்பு பூஜையில் சுற்றுப்புற பகுதியைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். செம்பட்டி கோதண்டராமர் கோயிலில், விநாயகருக்கு பல்வேறு நிவேதனப்பொருட்களால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன், சதுர்த்தி பூஜை நடந்தது.

சின்னாளபட்டி: சின்னாளபட்டி கீழக்கோட்டை முத்தாலம்மன் கண்திறப்பு மண்டபம் அருகே செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சின்னாளபட்டி விக்டரி மேல்நிலைப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தி திருவிழா நடந்தது. முதல்வர் மலர்விழி முன்னிலை வகித்தார். தாளாளர் ரவீந்திரன், ஸ்ரீ சக்தி வேலவன் அறக்கட்டளை செயல் உறுப்பினர் ஹரிஸ் வர்த்தன விக்னேஷ் பங்கேற்றனர். விசேஷ பூஜைகளுடன், மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !