காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் பவித்ர உற்சவம் நிறைவு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் பவித்ர உற்வசம் கடைசி நாளில், நேற்று நான்கு மாட வீதிகளில் சுற்றி வந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் அருள்பாலித்தார். வரதராஜப் பெருமாள் கோவிலில் 16ம் தேதி ஆவணி பவுர்ணமி அன்று பவித்ர உற்வசம் துவங்கியது. ஒவ்வொரு உற்சவத்தின் போது பெருமாள் மலர் மாலை அணிந்து காட்சியளிப்பார். இந்த உற்சவத்தில் நுால் மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த உற்சவத்தின் போது, தினமும் மாலை பெருமாள் தேவியர்களுடன் சன்னிதி தெருவில் உள்ள திருவடி கோவில் வரை சென்று வந்தார். கடைசி நாளான நேற்று மாலை, 6:30 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு, நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 7:30 மணிக்கு திரும்பி வந்து கிளி மண்டபத்தில் எழுந்தளினார். அங்கு ஹோமம், பாராயணம் இரவு, 1:00 மணி வரை நடைபெற்றது. தொடர்ந்து திருமஞ்சனம் முடிந்து, மலைக்கு பெருமாள் சென்றார்.