மகாளய அமாவாசை அழகர்கோவிலில் புனித நீராடிய பக்தர்கள்
அழகர்கோவில்: புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு அழகர்கோவில் மலை மீது உள்ள நுாபுரகங்கை தீர்த்தத்தில் நீராட ஏராளமான பக்தர்கள் செப்.,30 கோயிலுக்கு வந்தனர்.
கோயில் நிர்வாகத்தினர் அதிகாலையே மலைப் பாதையை திறந்து விட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டன. நுாபுரகங்கை தீர்த்தத் தொட்டியில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடிய பக்தர்கள், வெள்ளி அங்கியில் எழுந்தருளியிருந்த ராக்காயி அம்மனை தரிசித்தனர். மலையில் உள்ள சோலைமலை முருகனையும் தரிசித்தனர். காலையில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனையும், பகலில் சுவாமி புறப்பாடும் நடந்தது. மலை அடிவாரத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள், 18ம் படி கருப்பண சுவாமியையும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி செல்லதுரை தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.