30 வகையான பழங்களால் அலங்கரிக்கப்பட்ட தணிகாசலம்மன்
ADDED :3410 days ago
திருத்தணி:விஜயதசமியையொட்டி, தணிகாசலம்மன் கோவிலில், நேற்று, பால்குட அபிஷேகம் மற்றும் பழ வகைகளால் சிறப்பு அலங்காரம் நடந்தது.
திருத்தணி, அக்கைய்யாநாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவிலில், நவராத்திரி கடந்த 1ம் தேதி முதல் துவங்கியது.விழாவையொட்டி, தினமும் காலை மற்றும் மாலையில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. நேற்று, நிறைவு நாள் மற்றும் விஜயதசமியையொட்டி, காலை, 8:00 மணிக்கு கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து, சிறப்பு ஹோமம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, 108 பால்குட அபிஷேகம், தொடர்ந்து கலச நீர் அபிஷேகம் நடந்தது. காலை, 10:00 மணி மூலவர் அம்மனுக்கு 8,000 ரூபாய் மதிப்புள்ள, 30 வகையான பழங்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் வழிப்பட்டனர்.