கர்வா சவுத் விரதம்: வட மாநிலங்களில் கோலாகல கொண்டாட்டம்!
ADDED :3312 days ago
ராஜஸ்தான்: கணவரின் நலன் வேண்டி திருமணமான பெண்கள் அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம், வட மாநிலங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காரடையான் நோன்பாக கடைபிடிக்கப்படும் இந்த விரதம் வடநாட்டில் கர்வா சவுத் என்ற பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் கணவன் மனைவி இடையே ஒற்றுமையும், மாங்கல்ய பலமும், நீண்ட ஆயுள், ஆரோக்ய உண்டாகும் என்பது மக்களின் நம்பிக்கை. கர்வா சவுத் விரதத்தை முன்னிட்டு, பெண்கள் உண்ணா நோன்பு இருந்து, இரவு சல்லடையில் தீபம் ஏற்றி நிலவு பார்த்து, பின் அச்சல்லடை வழியாக கணவனை பார்ப்பார்கள். இதனால் அவர்களுடைய மாங்கல்ய பலம் கூடும் என கருதுகின்றனர். டெல்லி, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், உத்தரகண்ட் என வட மாநிலங்களில் இந்த கர்வா சவுத் விரதத்தை பெண்கள் சிறப்பாக கொண்டாடிவருகின்றனர்.