உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யாவாடியில் சிறப்பு யாகம்: திரளான பக்தர்கள் தரிசனம்!

அய்யாவாடியில் சிறப்பு யாகம்: திரளான பக்தர்கள் தரிசனம்!

மயிலாடுதுறை:  தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடி கிராமத்தில் மகா பிரத்தியங்கிராதேவி கோயில் உள்ளது. மயானத்தால் சூழப்பட்ட இந்த கோயிலில் 5 வகையான இலை களை கொண்ட தலவிருட்சம் உள்ளது. ராவணன் மகன் மேகநாதன் மற்றும் பஞ்சபாண்டவர்கள் இத்தலத்தில் அம்பாளை பூஜித்து வரங்களை பெற்றுள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் பிரசித்திப்பெற்றது. இந்த யாகத்தில் கலந்துகொண்டு அம்பாளை சரணடைந்து, பிரார்த் தனை செய்தால் சத்ரு உபாதைகள் நீங்கி, சகல நன்மைகளும் கிடைக்கும். ஆனால் ஐப்பசி மாதம், தீபாவளி அல்லது மறுநாள் வரும் அமாவாசையில் மிளகாய் வத்தல் தவிர்த்து, இனிப்புகளை கொண்டு யாகம் நடத்தப்படுவது வழக்கம். ஐப்பசி மாத அமாவாசையான நேற்று காலை கோயில் மண்டபத்தில் அம்பாளை எழுந்தருளச் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து வேத மந்திரம் ஓத, யாககுண்டத்தில் இனிப்புகள் சேர்த்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மகா பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் குருக்கள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !