துவங்கியது கந்த சஷ்டி விழா:திருப்போரூரில் கோலாகலம்
ADDED :3300 days ago
திருப்போரூர்:திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. காலை, 6:00 மணிக்கு, கோவில் வட்ட மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் கந்தசுவாமி பெருமான் எழுந்தருளினார். பின், பக்தர்களின், அரோகரா கோஷம் விண்ணை பிளக்க, கோவில் சிவாச்சாரியார்களால், 6:50 மணிக்கு கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி வீதியுலாவும் சிறப்பாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்களும், உள்ளூர் வாசிகளும் கலந்துகொண்டனர். விழாவை முன்னிட்டு, மூலவர் கந்தசுவாமி பெருமானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது.