கசவனம்பட்டி குருபூஜையில் குவிந்த வெளிமாநில சாதுக்கள்
கன்னிவாடி: கசவனம்பட்டி கோயில் குருபூஜையில் ஏராளமான வெளிமாநில சாதுக்கள் பங்கேற்றதால், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கன்னிவாடி அருகே கசவனம்பட்டியில் பிரசித்தி பெற்ற மவுனகுரு சுவாமி கோயில் உள்ளது. மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி, பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். இங்கு ஐப்பசி மாத மூல நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் குருபூஜை நடக்கிறது. இந்தாண்டு நவ. 3ல் துவங்கியது. இதில் பங்கேற்க பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த பக்தர்கள் மாலையணிந்து விரதமிருந்தனர். சிவனுாரணி, திருமலைக்கேணி, திருமூர்த்தி, சுருளி, சதுரகிரி, சோமலிங்கபுரம், காசி, ராமேஸ்வரம், பம்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து, புனித நீர் எடுத்து வரப்பட்டது. தீர்த்த, பால் கலசங்களுடன் கிராம விளையாடல் நடத்தி, மூலவருக்கு தீர்த்தாபிஷேகம் நடந்தது. நவ., 4 மகா யாகம் நடத்தப்பட்டு, யாக தீர்த்தம், 108 படி பாலாபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. மலர்ப்பந்தலுடன் மூலவருக்கு விசேஷ மலர் அலங்காரம், உற்சவருக்கு தங்க கிரீட அலங்காரத்துடன் குருபூஜை நடந்தது.
இந்நிகழ்ச்சியில் வடமாநிலங்களில் இருந்து ஏராளமான சாதுக்கள், பங்கேற்றனர். இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். விழாவையொட்டி ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.