உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணவாள மாமுனிகள் சன்னிதியில் நுழைய அனுமதி மறுப்பு

மணவாள மாமுனிகள் சன்னிதியில் நுழைய அனுமதி மறுப்பு

காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள மணவாள மாமுனிகள் சன்னிதிக்குள் பிராமணர்கள் அல்லாதோர் நுழைய அனுமதிக்காததால், கோவில் வாசலில் அமர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், ராமானுஜரின் மறு அவதாரமான மணவாள மாமுனிகள் சன்னிதி உள்ளது. இந்த சன்னிதிக்குள் அனைத்து வகுப்பினரும் நுழைவது தொடர்பான பிரச்னை, பல ஆண்டுகளாகவே நீடிக்கிறது. இந்நிலையில், ராமானுஜரின், 1,000மாவது ஆண்டு விழாக்கள் நடைபெற உள்ள நிலையில், நேற்று ராமானுஜரின் பிறந்த நாள் வழிபாடு இந்த சன்னிதியில் நடைபெற்றது. அந்த வழிபாட்டை, சமத்துவ வழிபாடாக நடத்த, ராமானுஜதாசர்கள் என்ற அமைப்பினர் வலியுறுத்தியதாக தெரிகிறது; மணவாள மாமுனிகள் சன்னிதிக்குள் அவர்கள் நுழைய முயன்றுள்ளனர்.

அப்போது, பிராமணர்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழையக்கூடாது என, அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதை எதிர்த்து, எதிர் தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தகவலறிந்த விஷ்ணு காஞ்சி போலீசார், கோவில் வளாகத்திற்கு விரைந்து, ராமானுஜதாசர்களிடம் பேச்சு நடத்தினர். தங்களை கோவிலுக்குள் அனுமதித்து, நாலாயிர திவ்ய பிரபந்தம் பாட அனுமதிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அவர்கள் காண்பித்தனர். எனினும், இறுதி வரை கோவிலுக்குள் யாரையும் அனுமதிக்காததால், கோவில் வெளியே அமர்ந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. மாலை, 6:00 மணிக்கு கோவிலில் இருந்து, ராமானுஜதாசர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான சில அமைப்பினர் எழுந்து சென்றனர்; சர்ச்சையும் முடிவுக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !