வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3448 days ago
பண்ருட்டி: பண்ருட்டி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு உற்சவர் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. பண்ருட்டி காந்திரோடு ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத வரதராஜபெருமாள் கோவிலில் உலக நன்மை பெற வேண்டி நேற்றுமுன்தினம் 7ம் தேதி திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு பெருமாளுக்கு திருகல்யாண உற்சவம் நடந்தது. விழாவையொட்டி காலை 8 மணிக்கு மூலவர் பெருமாள், பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு பூஜைகள், காலை 9 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6 மணிக்கு பெருமாளுக்கு பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டு, இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில் எம்.எல்.ஏ., சத்யாபன்னீர்செல்வம், முன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம், கோவில் நிர்வாக அதிகாரி ராஜாசரவணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.