உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஜயதசமி விழா கோலாகலம் குழந்தைகளுக்கு வித்யாரம்பம்

விஜயதசமி விழா கோலாகலம் குழந்தைகளுக்கு வித்யாரம்பம்

தக்கலை : தக்கலை, வெட்டுவெந்நி, கொல்லங்கோடு கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் நடந்தது. நாடெங்கும் கொண்டாடும் விஜயதசமி விழாவை முன்னிட்டு தக்கலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பத்மனாபபுரம் சரஸ்வதி அம்மன் கோயில், குமாரகோவில் முருகன் கோயில், தக்கலை பெருமாள் கோயில், பார்த்தசாரதி கோயில் உட்பட பல கோயில்களில் குழந்தைகளுக்கு எழுத்து சொல்லிக் கொடுக்கும் வித்யாரம்பம் நடந்தது. ஒவ்வொரு கோயில்களிலும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கு கொண்டனர். பத்மனாபபுரம் சரஸ்வதி அம்மன் கோயிலில் ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் கிரிஜா குமாரி அம்மா, பேராசிரியை ஜெயகுமாரி, ஓய்வுபெற்ற பேராசிரியர் விஜயமோகனன் குழந்தைகளுக்கு எழுத்து சொல்லி கொடுத்தனர். தக்கலை பெருமாள் கோயிலில் ஆசிரியர்கள் லீலாபாய், மோகனா, கீதா, ஈஸ்வரபிரசாத் ஆகியோரும், தக்கலை பார்த்தசாரதி கோயிலில் ஆசிரியர் ஈஸ்வரபிரசாத்தும் குழந்தைகளுக்கு எழுத்து சொல்லி கொடுத்தனர். இதுபோல் குமாரகோவிலில் கோயில் பூஜாரிகள் குழந்தைகளுக்கு எழுத்து சொல்லி கொடுத்தனர். இந்நிகழ்ச்சியின் போது குழந்தைகளின் பெற்றோர்கள், கோயில் கமிட்டியினர், பக்தர்கள் கலந்து கொண்டனர். வெட்டுவெந்நி கோயில் நவராத்திரி விழா நாடுமுழுவதும் கோயில்கள் மற்றும் வீடுகளில் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்பட்டது. மார்த்தாண்டம், குழித்துறை, வெட்டுவெந்நி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாடகை கார் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் சார்பில் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் விஜயதசமி அன்று இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு எழுத்துக்கு இருத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் எழுத்துக்கும் இருத்தும் "அட்சர அப்யாஸம் நிகழ்ச்சி நடந்தது. வெட்டுவெந்நி கண்டன் சாஸ்தா கோயிலில் வித்யா ராஜகோபால பூஜை நடந்தது. மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி தலைமையில் சரஸ்வதி சன்னிதியில் எழுத்துக்கு இருத்தும் நிகழ்ச்சி நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் செயலாளர் புரு÷ஷாத்தமன் நாயர் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதைப்போல் குழித்துறை சாமுண்டேஸ்வரி அம்மன் கோயில், கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில், கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் எழுத்துக்கு இருத்தும் அட்சர அப்யாஸம் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !