கிறிஸ்துமஸ் சிந்தனை 5: உத்தரவுக்கு அடிபணிவோம்
ஒரு போர்முனையில் வீரர்கள் மாலை வேளையில் ஓய்வாக அமர்ந்திருந்தனர். படைத்தலைவர் அவர்களிடம், “இன்றைய போரில் யார் மிகச்சிறப்பாக சண்டையிட்டார்?” என்றார்.ஒவ்வொருவரும் தங்கள் கருத்தைக் கூறினர். “தன் உயிரைப் பணயம் வைத்து இன்னொரு வீரனை காப்பாற்றிய ஜார்ஜ் தான் சிறந்த வீரன்,” என்று ஒரு வீரனை நோக்கி கைகாட்டினான் ஒரு வீரன்.“இல்லை இல்லை... நம் தேசத்தைக் காக்க துப்பாக்கிக் குண்டுகளை மார்பில் தாங்கி மடிந்தானே அல்போன்ஸ்... அவனை விடவா இவன் சிறந்தவனாக முடியும்?” என்று கேட்டான் மற்றொரு வீரன்.“அவனோ மடிந்து விட்டான். கால்களையும், கைகளையும் இழந்து மனதில் நம்பிக்கையுடன் மருத்துவமனையில் படுத்தபடியே மயக்க நிலையிலும் ’நமது தேசம் வாழ்க’ என முழங்கி கொண்டிருக்கிறானே சார்லஸ்... அவனே சிறந்த வீரன்,”என்று சர்டிபிகேட் கொடுத்தான் இன்னொருவன்.இப்படியாக, ஒவ்வொரு வீரனும் ஒவ்வொரு கருத்தைச் சொல்ல, படைத்தலைவர் இடைமறித்தார்.“நீங்கள் போர்க்களத்தில் சாதாரணமாக நடக்கும் விஷயங்களை பற்றியே பேசுகிறீர்கள். உயிர் போவதும், ஒருவரை ஒருவர் பாதுகாப்பதும், உறுப்புகளை இழப்பதும் போர்க்களத்தில் சகஜமே. ஆனால், நம் வீரன் ஒருவனை எதிரிநாட்டு வீரன் ஒருவன் வெட்டுவதற்காக வாளை ஓங்கினான். அந்த நேரத்தில் போர்நிறுத்த முரசு அறையப்பட்டது. உடனே ஓங்கிய கையை கீழே போட்டு விட்டான். தன் படைத்தலைவரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்திருக்கிறான். எதிரியையும் மனிதனாக மதித்த அவனே சிறந்த வீரன்,” என்றார்.“இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறான். அலப்புகிற (மீறுகிற) மூடனோ விழுவான்,” என்கிறது பைபிள். ஆண்டவரின் கட்டளைகளையும் இதே போல் ஏற்று நடப்போம். நன்மை ஆயிரம் பெறுவோம்.