மஞ்சூரில் விளக்கு பூஜை பக்தர்கள் பங்கேற்பு
மஞ்சூர் : மஞ்சூரில் நடந்த ஐயப்பன் விளக்கு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மஞ்சூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் சார்பில் ஆண்டு தோறும் ஐயப்பன் விளக்கு பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டின், 53வது விளக்கு பூஜையையொட்டி, கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. காலை,10:00 மணிக்கு நடந்த சிறப்பு பூஜையில், நீண்ட வரிசையில் நின்று, பக்தர்கள் ஐயப்பனை வழிபட்டனர். தொடர்ந்து, மாலை,3:00 மணிக்குபெண்கள் உட்பட ஏராளமானோர் புடைசூழ, குந்தாபாலம் சிவன் கோவிலிருந்து, ஐயப்பன் விளக்கு ஏந்தியவாறு அனைவரும் வந்தனர். வழி நெடுங்க மேளம் தாளத்துடன், பூஜை செய்து மக்கள் வழிபட்டனர். இரவு,9:00 மணியளவில் மஞ்சூர் ஐயப்பன் கோவிலை ஊர்வலம் வந்தடைந்தது. பின் நடந்த பூஜையில் பக்தர்கள், திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சங்கம், பொதுமக்கள் செய்திருந்தனர்.