உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணகி கோயிலை சீரமைக்க தொல்லியல்துறை டெண்டர்

கண்ணகி கோயிலை சீரமைக்க தொல்லியல்துறை டெண்டர்

கூடலுார்: தமிழக - கேரள எல்லையில் சேதமடைந்த பழமை வாய்ந்த மங்கலதேவி கண்ணகி கோயிலை சீரமைக்க, கேரள தொல்லியல் துறை சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.  தேனி மாவட்டம் கூடலுார் அருகே தமிழக- கேரள எல்லையான வின்னேற்றிப்பாறை மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோயில் உள்ளது. தமிழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயில் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை இரு மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் ஒவ்வொரு ஆண்டும் சேதமடைந்து தற்போது முழுமையாக அழியும் நிலையில் உள்ளது. கண்ணகி சிலையும் உடைந்துள்ளது. இதனால் இதனை சீரமைக்க மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் கேரள உயர்நீதி மன்றத்தில் 2014ல் வழக்கு தொடரப்பட்டது. அழிந்து வரும் கண்ணகி கோயிலை முழுமையாக சீரமைத்து தர வலியுறுத்தி, கேரள தொல்பொருள் ஆய்வுத்துறை மற்றும் வனத்துறை மீதும் வழக்கு தொடர்ந்தனர்.

இதன் எதிரொலியாக 2016 ஏப்., 5ல் கேரள உயர்நீதி மன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பில், கண்ணகி கோயிலை தொல்பொருள் ஆய்வுத் துறையும், கேரள வனத்துறையும் விரைந்து சீரமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்த முன்வராததால் மீண்டும் கண்ணகி அறக்கட்டளை சார்பில் தீர்ப்பை அமல்படுத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை நடந்தது. இதில் கண்ணகி கோயிலை சீரமைக்க ரூ.39 லட்சத்து 33 ஆயிரத்து 725 க்கு திட்ட மதிப்பீடு செய்து விடப்பட்ட டெண்டர் அறிவிப்பை நீதிமன்றத்தில் தொல்பொருள் ஆய்வுத்துறை வழங்கியுள்ளது. டெண்டர் உறுதியானவுடன் விரைவில் கோயில் சீரமைப்புப் பணி துவங்கும்.  கண்ணகி அறக்கட்டளையினர் கூறும்போது: அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட வழக்கின் எதிரொலியாக, கண்ணகி கோயில் சீரமைப்பு பணி விரைவில் துவங்க உள்ளது. சீரமைப்பு பணிகள் முடிந்து விட்டால் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு கோயில் பாதுகாக்கப்பட்டு, தமிழக மக்கள் சுதந்திரமாக வழிபடுவதற்கான வாய்ப்புகள் வரும். கோயிலுக்கு செல்லும் பாதையும் சீரமைக்கப்படும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இக்கோயிலை எப்படி பார்க்கப்பட்டதோ அதே போல் தமிழக மக்கள் மீண்டும் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது,என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !