உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருப்பரங்குன்றம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருப்பரங்குன்றம்:  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடந்தது. பிப். 5ல் தெப்பத் திருவிழா நடக்கிறது.

திருவிழா துவங்கும் வகையில்  ஜன. 26 மாலை கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அனுக்ஞை விநாயகர் முன்பு அனுக்ஞை, வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தது. காலை திருவாட்சி மண்டபத்தில் விநாயகர், சீவிலி நாயகர் முன்பு ரிஷப யாகம் முடிந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில் கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். சிவாச்சார்யார்களால் கொடியேற்றப்பட்டு, தர்ப்பை புல், மா இலை வைத்து பட்டு துணியால் சுற்றி மாலை அணிவிக்கப்பட்டது. கொடிக்கம்பத்தின் அடிப்பாகத்தில் பல்வகை திரவிய அபிஷேகங்கள் நடந்தன. திருவிழா நம்பியார் ஷண்முகசுந்தரம் சிவாச்சார்யாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. கோயில் துணை கமிஷனர் செல்லத்துரை, பேஷ்கார் புகழேந்தி, மணியம் கண்ணன்,  பணியாளர்கள் பங்கேற்றனர்.

திருவிழா நடக்கும் பிப்.  5வரை தினம் காலையில் சிம்மாசனம், தங்கச் சப்பரம், சப்பரம், விடையாத்தி சப்பரம், மாலையில் தங்க மயில், வெள்ளி பூதம், அன்னம், சேஷம், ரிஷபம், ரத்தின சிம்மாசனம், புஷ்பம், பச்சை குதிரை வாகனங்களில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர். திருவிழா முக்கிய நிகழ்ச்சியாக, ஜன. பிப் 4ல் தை கார்த்திகையும், அன்று காலை  தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி முடிந்து, 16கால் மண்டபம் முன்பு உள்ள சிறிய வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி, ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். பிப். 5  காலையில் ஜி.எஸ்.டி., ரோட்டிலுள்ள தெப்பக்குள தண்ணீரில் அமைக்கப்பட்டிருக்கும் மிதவை தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி தெப்பத் திருவிழா நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !