மதுரையில் சித்திரை திருவிழா: மே 10ல் ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்
அழகர்கோவில்: வரலாற்று சிறப்புமிக்க மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழா மே 6ல் துவங்குகிறது. மே 8ல் அழகர் மலையில் இருந்து கள்ளழகர் கோலத்தில் மதுரை புறப்படும் சுந்தரராஜ பெருமாள், மே 10ல் பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க வைகை ஆற்றில் இறங்குகிறார். அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடக்கும் விழாக்களில் சித்திரை திருவிழா முக்கியமானது. வரலாற்று சிறப்பு மிக்க கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் இறங்கும் பெருமாளை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வைகையில் கூடுவர்.இத்திருவிழா மே 6ல் துவங்குகிறது. முதல் 2 நாட்களும் பல்லக்கில் புறப்படும் சுந்தரராஜ பெருமாள் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.
மதுரைக்கு புறப்படுகிறார் : மே 8ல் மாலை 6:00 மணிக்கு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் நேரிக்கம்புடன், கள்ளழகர் திருக்கோலத்தில், தங்கப்பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்படுகிறார். கோயில் ராஜகோபுரத்தில் உள்ள 18ம் படி கருப்பணசாமி சன்னதி முன் உள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகருக்கு கொம்பு சாத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. கருப்பணசாமியிடம் அனுமதி பெற்று இரவு 7:00 மணிக்கு கோயிலில் இருந்து மதுரைக்கு புறப்படுகிறார்.
புதூரில் எதிர்சேவை : வழியில் பக்தர்கள் அமைத்திருக்கும் மண்டக படிகளில் எழுந்தருளும் கள்ளழகர் மே 9ல் காலை 6:00 மணிக்கு மூன்றுமாவடி வருகிறார். அங்கு பக்தர்கள் சார்பில் எதிர்சேவை நடக்கிறது. தொடர்ந்து புதூரில் காலை 9:00 மணிக்கும், மாலை 5:00 மணிக்கு தல்லாகுளம் அவுட்போஸ்டிலும் எதிர்சேவை நடக்கிறது. அன்று இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் திருமஞ்சனம் நடக்கிறது. ஆற்றில் இறங்குகிறார் மே 10 அதிகாலை தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் தல்லாகுளத்தில் வெட்டிவேர் மற்றும் ஆயிரம் பொன் சப்பரங்களில் எழுந்தருளுகிறார். பின் அங்கிருந்து புறப்படும் அவர் காலை 6:15 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க வைகை ஆற்றில் இறங்குகிறார். காலை 7:30 மணிக்கு வைகையில் இருந்து புறப்பட்டு, காலை 10:00 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகருக்கு பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை அங்கிருந்து புறப்பட்டு இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலை சென்றடைகிறார். அங்கிருந்து மே 11ல் காலை சேஷ வாகனத்தில் புறப்படும் அவர் மதியம் 12:00 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார்.
பூப்பல்லக்கு : பகலில் அங்கிருந்து புறப்பட்டு இரவு 8:00 மணிக்கு ராமராயர் மண்டபம் வருகிறார். அன்றிரவு தசாவதாரம் நடக்கிறது. மே 12ல் காலை மோகன அவதாரத்தில் புறப்படும் கள்ளழகர் அனந்தராயர் மண்டபத்தில் ராஜாங்க சேவையிலும், மே 13ல் இரவு 2:30 மணிக்கு மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கும் நடக்கிறது. அங்கிருந்து மலைக்கு புறப்படும் அவர் புதூர், அப்பன்திருப்பதி வழியாக மே 14ம் தேதி அழகர் மலையை அடைகிறார். முன்னதாக திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக ஏப்., 26ல் காலை 9:30 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலிலும், பகலில் வண்டியூரிலும் கொட்டகை முகூர்த்தம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.