பகவதியம்மன் கோயில் சக்திகரகம்: ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்
உத்தமபாளையம்: உத்தமபாளையம் ஸ்ரீ பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முல்லையாற்றங்கரையிலிருந்து எடுத்து வரப்பட்ட சக்தி கரகத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று தரிசனம் செய்தனர். உத்தமபாளையத்தில் உள்ள கோயில்களில் பழமையானதும், பிரசித்திபெற்றதுமான ஸ்ரீ பகவதியம்மன் கோயில் திருவிழா கடந்த ஒருவாரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினரின் மண்டகப்படி நடைபெற்றது. மண்டகப்படியின் போது எருமைக்கிடா வீதி உலா வரும். பெண்கள் மஞ்சள் தண்ணீர் எருமைக்கிடா மீது ஊற்றுவது வழக்கமாகும். நேற்று முன்தினம் நள்ளிரவில் முல்லையாற்றங்கரையில் சக்திகரகம் எடுத்து வரப்பட்டது. சக்திகரகத்தை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பெண்களும், ஆண்களும் திரண்டிருந்தனர். பின்னர் நேற்று காலையில் அக்னி சட்டி எடுத்தல், உருண்டு கொடுத்தல், மாவிலக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்கள் பக்தர்களால் நிறைவேற்றப்பட்டது. நேற்று காலை எல்லையம்மன் கோயிலில் பாலாபிஷேகம் நடைபெற்று, பின்னர் காலை, பிற்பகல் என அன்னதானம் நடைபெற்றது. நேற்று இரவு எட்டுத் திக்கிலும் காவு கொடுக்கப்பட்டு, சக்தி கரகம் முல்லையாற்றில் கரைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சக்திகரகம் கரைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.