மழை, உலக நன்மைக்காக வர்ண ஜெப பாராயணம்
நாமக்கல்: அணியார் வரதராஜ பெருமாள், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்களில், மழை வேண்டி, சிறப்பு வர்ண ஜெப பாராயணம் மற்றும் பால் குட ஊர்வலம் நடந்தது. வேலக்கவுண்டம்பட்டி அடுத்த, அணியார் வரதராஜ பெருமாள் கோவிலில், மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் ஊர் பொதுமக்கள் சார்பில் சிறப்பு வர்ண ஜெபம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து, தண்ணீர் நிரப்பப்பட்ட, ஐந்து மெகா சைஸ் பாத்திரங்களில், அர்ச்கர்கள் அமர்ந்து, அவர்த்தி மந்திரங்கள் பாராயணம் செய்தனர். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
* நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பால்குட ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது. எம்.எல்.ஏ., பாஸ்கர் துவக்கிவைத்தார். ஊர்வலமானது ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து புறப்பட்டு திருப்பாக்குளத்தெரு, கோட்டை ரோடு வழியாக மீண்டும் ஆஞ்சநேயர் கோவிலை வந்தடைந்தது. பின், ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் கிருஷ்ணன், உதவி ஆணையர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.