பிரம்மோற்சவ விழா: சிம்ம வாகனத்தில் சுந்தரராஜர் உலா
ஆர்.கே.பேட்டை : சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று முன்தினம், சுவாமி, சிம்ம வாகனத்தில் வீதியுலா எழுந்தருளினார். திரளான பக்தர்கள் ஆரத்தி எடுத்து தரிசித்தனர். ஆர்.கே.பேட்டை சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில் ஆண்டு பிரம்மோற்சவம், புதன் கிழமை காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மாலை, 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் சுவாமிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. பின், சேஷ வாகனத்தில், உற்சவர் பெருமாள், வீதியுலா எழுந்தருளினார். நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு திருமஞ்சனமும், அன்று இரவு, 7:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு செய்தார். பஜார் வீதி, திருத்தணி சாலை, அஞ்சலக வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தார். இன்று, சனிக்கிழமை இரவு கருட சேவை நடக்கிறது. வரும் திங்கட்கிழமை காலை தேர் திருவிழா நடைபெறும்.