குமர கோட்டம் முருகன் கோயிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
ADDED :3388 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவில் வைகாசி பிரம்மோற்சவம், நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமி புறப்பாடு காஞ்சிபுரத்தில், குமரகோட்டம் சுப்ரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. இது, கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்குகிறது. இந்த கோவில் பிரம்மோற்சவம், ஆண்டுதோறும் வைகாசி மாதம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா, நேற்று காலை, 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள், பவளக்கால் சப்பரவாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப்பெருமான், நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, ஆடு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடை பெற்றது. வரும், ஞாயிற்றுக்கிழமை தேர் திருவிழாவும், 8ல் திருக்கல்யாணமும் நடக்கிறது. 9ம் தேதி பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.