காக்கங்கரை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் : இஸ்லாமியர்கள் தரிசனம்
ADDED :3079 days ago
செங்கம்: செங்கம், காக்கங்கரை விநாயகர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், இஸ்லாமியர்களும் பங்கேற்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பஜார் வீதியில் உள்ள, பழமை வாய்ந்த காக்கங்கரை விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. நேற்று காலை, 10:15 மணிக்கு, யாகசாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீரை, சுவாமி மூல கருவறையின் மேல் உள்ள கலசத்தின் மீது ஊற்றி, வேத மந்திரங்கள் முழங்க, கும்பாபிஷேகம் நடந்தது. அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்களும், கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.