திருக்குளத்தில் குவிந்த திருத்தணி பக்தர்கள்
திருத்தணி: மகாளய அமாவாசையை ஒட்டி, திருக்குளம் மற்றும் நல்லாங்குளத்தில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க, திரளான பக்தர்கள் குவிந்தனர். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நேற்று மகாளய அமாவாசையை ஒட்டி, திருத்தணி முருகன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள திருக்குளம் என்ற சரவண பொய்கை மற்றும் நல்லாங்குளம் ஆகிய இடங்களில் தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. அதிகாலை முதல் மதியம், 2:00 மணி வரை நகர மற்றும் கிராம வாசிகள் குவிந்தனர். அங்கு தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, நேர்த்தி கடனை செலுத்தினர். மகாளய அமாவாசையை ஒட்டி திருக்குளத்தை சுற்றி, தற்காலிக தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் விற்கும் கடைகள் முளைத்திருந்தன. நுாற்றுக்கும் மேற்பட்ட புரோகிதர்கள் திருக்குளத்திற்கு வந்து, நகர மற்றும் கிராம வாசிகளுக்கு தர்பணம் வழங்க உதவியாக செயல்பட்டனர்.
திருத்தணி முருகன் துணை கோவிலான, மத்துார் மகிஷாசூரமர்த்தினி அம்மன், திருத்தணி மடம் கிராமம், படவேட்டம்மன், அக்கைய்யா நாயுடு தெரு தணிகாசலம்மன், கீழ்பஜார் அங்காள பரமேஸ்வரி அம்மன், காந்தி மெயின் ரோடு துர்க்கையம்மன் மற்றும் திருத்தணி வன துர்க்கையம்மன் ஆகிய கோவில்களில், நேற்று, மகாளய அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன பகல், 12:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. மாலை, 5:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை நடந்த சிறப்பு பூஜையில், திரளான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.