உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொலிவிழந்த வரதராஜ பெருமாள் கோவில் குளம்

பொலிவிழந்த வரதராஜ பெருமாள் கோவில் குளம்

மீஞ்சூர்: ஆகாயத்தாமரை செடி மற்றும் கோரை புற்கள் வளர்ந்தும், குடியிருப்புகளின் கழிவு நீராலும் வரதாஜ பெருமாள் கோவில் திருக்குளம் பொலிவிழந்து கிடக்கிறது. வட காஞ்சி எனப்படும் மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவிலின் திருக்குளம், கோவிலின் பின்பகுதியில் அமைந்து உள்ளது. இந்த குளம் உரிய பராமரிப்பு இல்லாமல் சீரழிந்து கிடக்கிறது. குளத்தை சுற்றிலும் உள்ள குடியிருப்புகளின் கழிவு நீர் குளத்தில் நேரிடையாக விடப்படுகிறது. குளத்தின் கரைகளில் குடியிருப்புகளின் குளியல் அறைகள் கட்டப்பட்டு, கழிவுநீர் குளத்திற்கு செல்கிறது.

குளமும் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி வருகிறது. குடியிருப்புகளின் குப்பை கிடங்காகவும் மாறி திருக்குளத்தின் புனிதத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது மழைநீருடன், குடியிருப்புகளின் கழிவுநீர், குப்பை, ஆகாயத்தாமரை மற்றும் கோரை புற்கள் என, குளம் பராமரிப்பு இன்றி பொலிவிழந்து கிடக்கிறது. இது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தி வருகிறது. பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்கண்ட வரதராஜ பெருமாள் கோவில் திருக்குளத்தில் குப்பை, கழிவுகளை அகற்றவும், உரிய அளவீடுகள் செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுச்சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !