அவர் தான் பெரியவர்
அப்பா, அம்மா, நான்கு பிள்ளைகள், நான்கு பெண்கள் எனப் பத்துப்பேர் கொண்ட குடும்பம். தெய்வ பக்தி நிறைந்தவர்கள். கடும் பொருளாதார சிரமத்தை சகித்துக் கொண்டு எளிமையாக வாழ்ந்தார்கள். பெரியவருக்கு அவர்கள் மேல் அன்புண்டு. ஒருநாள் யாரோ ஒரு பக்தர் கொஞ்சம் பணத்தை பெரியவருக்குக் காணிக்கையாகச் சமர்ப்பித்தார். அன்பர் ஒருவரை அழைத்த பெரியவர், அந்தப் பணத்தை அந்தக் குடும்பத்தினரிடம் கொடுக்குமாறு உத்தரவிட்டார். ஆனால் தான் பணத்தை அனுப்பியதாக சொல்ல வேண்டாம் என்று குறிப்பிட்டார். அன்பர் தொகையோடு அந்தக் குடும்பத் தலைவரைத் தேடிப் போனார். கடும் சிரமத்தில் உள்ள அவர் தொகையைப் பெற்றுக்கொண்டு செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அவரோ தங்களுக்கு சிரமம் பழகிவிட்டதென்றும் பணம் எதுவும் தேவையில்லை என்றும் நிராகரித்து விட்டார். பெரியவரிடம் விஷயத்தைச் சொன்னார் அன்பர். பெரியவர் நகைத்தவாறே, உனக்கு இட்ட பணி என்ன? தொகையை அவர்களிடம் சேர்ப்பிப்பது தானே? எப்படியாவது கொடுத்துவிட்டு வா! என்றார். அன்பர் மறுபடியும் போய் வற்புறுத்தினார். ஆனால் அதே பதில், இன்னும் கொஞ்சம் கண்டிப்பான தொனியில் சொல்லப்பட்டது. அன்பருக்குச் சலிப்பு. அவர் பெரியவரிடம் மறுபடி வந்தார். சுவாமி! என்ன சொல்லியும் அவர்கள் இலவசமாகத் தரப்படும் தொகையை ஏற்க மறுத்துவிட்டனர்! எனத் தெரிவித்தார். பெரியவர் புன்முறுவலோடு சரி. மறுபடி போய், நான் கொடுக்கச் சொன்னதாகச் சொல்!சூ எனப் பணித்தார்.
அன்பர் மூன்றாம் முறையாக அதே வீட்டிற்குப் போனார். அப்போது அங்கே புதிதாக வந்திருந்த ஒருவர், தங்கள் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருப்பதாகவும், பணத்திற்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை என்றும் அந்தக் குடும்பத் தலைவரிடம் பேசிக் கொண்டிருந்தார். இப்போது, பெரியவர் அந்தத் தொகையை அனுப்பியிருப்பதாகச் சொன்னார் அன்பர். பணிவோடு தொகையை வாங்கிக் கொண்டார் குடும்பத் தலைவர். தங்கள் வீட்டுக்கு வந்தவரிடம், இந்தத் தொகையை வைத்துக்கொண்டு உங்கள் மகள் கல்யாணத்தை நடத்துங்கள்! என அதை அப்படியே கொடுத்து விட்டார். தனக்கே சிரமம், ஆனால் கிடைத்த தொகையை அப்படியே இன்னொருவருக்குக் கொடுக்கிறாரே! என பிரமித்தார் தொகையைக் கொண்டு சென்ற அன்பர். பெரியவரிடம் வந்து தகவலைச் சொன்னார். பெரியவரின் விழிகள் மகிழ்ச்சியில் பளபளத்தன. தங்களுக்கே பொருளாதார சிரமம் இருந்தாலும் அடுத்தவர்களுக்கு உதவும் மனம் இருக்கிறதே அவர்களிடம்! உண்மையில் அவா தான் பெரியவா! என்றார். - திருப்பூர் கிருஷ்ணன்