உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா

திருப்பரங்குன்றத்தில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா

திருப்பரங்குன்றம்: நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க, குன்றத்து சுப்பிரமணிய சுவாமி தனது கரத்திலுள்ள வேல்மூலம் மலைமீதுள்ள பாறையில் கீறி, கங்கைக்கு நிகரான  தீர்த்தத்தை சுனையில் உருவாக்கியதை நினைவு கூறும் வகையிலும், மழை வேண்டியும் கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள வேல் மலைமேல் கொண்டு செல்லும் விழா நடந்தது.

நேற்று காலை மூலவர் கரத்திலுள்ள வேலுக்கு, சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டது . சிறப்பு பொது பூஜை முடிந்து கிராமத்தினருக்கு மரியாதை செய்யப்பட்டது, பல்லக்கில் வீதி உலா சென்று மலைமேல் கொண்டு செல்லப்பட்டு, சுப்பிரமணியர் கரத்தில் வேல் சமர்ப்பிக்கப்பட்டது. அங்கு காசி விஸ்வநாதர், விசாலாட்சி,  பஞ்சலிங்கம், நந்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவருக்கு பூஜைகள் முடிந்து, கோயில் சிவாச்சார்யார்கள் வேலை, சுனை தீர்த்தத்தில் எடுத்துச் சென்று பால், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகை திரவிய அபிஷேகம் செய்தனர். கிராமத்தினர் சார்பில் 150 படி அரிசியினாலான கதம்ப சாத பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் வேல் புறப்பாடாகி, மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழனி ஆண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டு, இரவு வேல், சுவாமிக்கு அபிஷேகங்கள், தீபாராதனைகளுக்குப்பின்பு பூ பல்லக்கில் வேல் வீதி உலா முடிந்து  மூலவர் கரத்தில் மீண்டும் சேர்ப்பிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !