திருத்தணி சொர்ணாஷ்ட பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :3025 days ago
திருத்தணி : தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, சதாசிவலிங்கேஸ்வர சுவாமி கோவிலில், பைரவருக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன. திருத்தணி, பழைய தர்மராஜாகோவில் தெருவில், சதா சிவலிங்கேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இதன் வளாகத்தில் உள்ள சொர்ணாஷ்ட பைரவர் சன்னதியில், மாதந்தோறும் பவுர்ணமி முடிந்த எட்டாம் நாளில், தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்படுகின்றன.அந்த வகையில், நேற்று மாலை, தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, பைரவர் சன்னதி முன், ஒரு யாகசாலை ஒரு கலசம் வைத்து சிறப்பு ஹோமம் நடந்தது. மூலவர் பைரவருக்கு விபூதி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம், குங்குமம் மற்றும் கலச அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது.திரளான பக்தர்கள் பங்கேற்று, நெய்தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர்.