விருத்தாசலம் கோவில்களில் கந்தர் சஷ்டி விழா துவக்கம்
ADDED :3110 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில், முருகன் சுவாமிக்கு கந்தர் சஷ்டி விழா துவங்கியது. கந்தர் சஷ்டி விழாவை முன்னிட்டு, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர் சுவாமிக்கு காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு மேல் சுவாமிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வாக, வரும் 25ம் தேதி சூரசம்ஹாரத்தன்று, இரவு 7:00 மணிக்கு மேல் விருத்தாம்பிகை அம்மனிடம் சண்முக சுப்ரமணியர் சுவாமி, வேல் வாங்கி வந்து, சூரனை வதம் செய்யும் ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது. அதேபோல், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் கந்தர் சஷ்டி விழா துவங்கியது. இதையொட்டி, சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தங்கமுலாம் கவசத்தில் கொளஞ்சியப்பர் அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.