தர்மபுரி விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. தர்மபுரி எஸ்.வி.,ரோடு சாலை விநாயகர் கோவிலில், காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டது. பின், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, விநாயகர் உற்சவர் ஊர்வலம் நடந்தது. இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் குபேர கணபதி கோவில், நெசவாளர் காலனி சக்தி விநாயகர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், காரிமங்கலம் ராஜகணபதி கோவில் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில், நேற்று விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
* கிருஷ்ணகிரி புதுப்பேட்டை சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை, 7:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, விநாயகருக்கு, 608 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பெண்கள் நெய் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.