வைகுண்ட பெருமாள் கோவில் கோபுரத்தில் வளர்ந்த செடிகளை அகற்றணும்!
ADDED :3062 days ago
அகரம் : வைகுண்ட பெருமாள் கோவில் கோபுரத்தின் மீது வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாம்பதி ஊராட்சி, அகரம் கிராமத்தில், பழமை வாய்ந்த வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், 11 ஆண்டு களுக்கு முன், 25 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற்று, தினமும் நித்ய பூஜைகள் செய்யப்படுகின்றன. கோவில் முறையாக பராமரிக்கப்படாததால், கோபுரத்தின் மீதும், மண்டபத்தின் மீதும் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. இதே நிலை நீடித்தால், கோபுரத்தில் விரிசல் விழும் என, பக்தர்கள் கவலை உடன் தெரிவிக்கின்றனர். எனவே, திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் சாலையில் உள்ள இக்கோவிலில், அறநிலையத் துறையினர் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.