இணையதள பதிவில் 3 லட்சம் பேர் தரிசனம் : இதுவரை 15 லட்சம் பேர் முன்பதிவு
சபரிமலை: சபரிமலையில் இணையதள முன்பதிவில், 12 நாட்களில் 3 லட்சம் பேர் தரிசனம் செய்துஉள்ளனர். இதுவரை 15 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சபரிமலை தரிசனத்திற்கு கேரள போலீஸ் துறை சார்பில் இணையதள முன்பதிவு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான கட்டணம் எதுவும் கிடையாது. இந்த ஆண்டு 16-ம் தேதி முதல் 27 வரையிலான 12 நாட்களில் 3 லட்சம் பேர் இதன்மூலம் தரிசனம் நடத்தியுள்ளனர். மண்டல - மகரவிளக்கு சீசனில் மொத்தம் 15.50 லட்சம் பேர் இந்த முறையில் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் 15 லட்சம் பேர் முன்பதிவு செய்து விட்டனர். இனி 50 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவு செய்தவர்கள் பம்பையில் ராமமூர்த்தி மண்டபத்தில் செயல்படும் இதற்கான அலுவலகத்தில் அடையாள அட்டையை காட்டி கூப்பன் பெற்று செல்ல வேண்டும்.இவர்கள் மரக்கூட்டத்தில் இருந்து சரங்குத்தி செல்லாமல் சந்திராங்கதன் ரோடு வழியாக பெரிய நடைப்பந்தல் சென்று 18-ம் படியேற முடியும்.