உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று மிலாடி நபி

இன்று மிலாடி நபி

மனிதர்கள் மிருக குணத்துடன் வாழ்ந்த காலத்தில், அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்படும் துாதுவர்களாக நபிமார்கள் விளங்கினர். இவர்களில் ஹஜ்ரத் ஈஸா (அலை), கி.பி. 33, ஏப்ரல் 3ல் விண்ணகத்திற்கு உயர்த்தப்பட்டார்கள். அதன்பிறகு சுமார் 500 ஆண்டுகளாக எந்த ஒரு நபியும் பூமிக்கு வரவில்லை. இதன் காரணமாக மக்களின் வாழ்க்கை முறை மிகவும் மோசமாக இருந்தது. குறிப்பாக அரபு நாட்டில் வாழ்ந்தவர்களின், வாழ்க்கை முறையை சொல்லவே வேண்டாம் என்ற நிலை இருந்தது. குடிப்பதும், பெண் குழந்தைகள் பிறந்தால் கொன்று புதைப்பதும், சமூக விரோத செயல்களும் ஆக்கிரமித்திருந்தது. இத்தகைய பாவகரமான வாழ்க்கையை மேற்கொண்டிருந்த மக்களை, சீர்திருத்த அல்லாஹ்வால் பூமிக்கு அனுப்பப்பட்ட மாமணி தான் நபிகள் நாயகம்.

நாயகம், கி.பி. 570, ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதி மெக்கா நகரில் அவதரித்தார். இவரது தந்தை ஹஜ்ரத் அப்துல்லாஹ். தாய் ஹஜ்ரத் அமீனா. நாயகத்தின் முழுப்பெயர் ஹஜ்ரத் முஹம்மத் முஸ்தபா அஹ்மத் முஸ்தபா ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் என்பதாகும். நாயகம் பிறப்பதற்கு முன்பே அவரது தந்தை இறந்து விட்டார். தாயார், நாயகம் பிறந்த ஆறாம் ஆண்டில் காலமாகி விட்டார். எனவே, பாட்டனார் ஹஜ்ரத் அப்துல் முத்தலிப்பின் பாதுகாப்பில் நாயகம் வளர்ந்தார். பிறகு அவரும் காலமாகி விடவே, சிறிய தந்தை ஹஜ்ரத் அபுதாலிப் பராமரிப்பில் வளர்ந்தார்.

அவர் இளமையிலேயே செல்வாக்குடனும், நற்குணத்துடனும் திகழ்ந்தார். இதன் காரணமாக மக்கள் அவரை அல்அமீன் (நம்பிக்கையாளர்) என்றும், அஸ்ஸாதிக் (உண்மையாளர்) என்றும் பாராட்டினர். 23ம் வயதில் கதீஜா அம்மையாரை திருமணம் செய்து கொண்டார். 40ம் வயதில் இவரை தனது துாதராக அல்லாஹ் அறிவித்தான். நாயகம் அவர்களுக்கு 11 துணைவியர் இருந்தனர். இவர்கள் மூலம் ஏழு குழந்தைகள் பிறந்தது. ஆண் மக்கள் மூவரும், குழந்தையாக இருந்த போதே இறந்து விட்டனர்.

பெண்களில் நான்காவதாக பிறந்த பாத்திமா அம்மையார் இவருக்கு இரண்டு பேரன்களை பெற்றுத்தந்தார். அவர்களுக்கு ஹசன், ஹூசைன் என பெயரிடப்பட்டது. பாத்திமாவை, சுவர்க்கத்து பெண்களின் தலைவி என இஸ்லாமிய மக்கள் போற்றுகின்றனர்.

நாயகம், இறைவனின் துாதராக அறிவிக்கப்பட்டதும், நமது வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே! நான் அவனுடைய துாதனாக இருக்கிறேன், என்றார். இதைக்கேட்ட மெக்காவாசிகள் அவரை துன்புறுத்தினர். 53 வயது வரை அவர் இந்தக் கொடுமையை அனுபவித்தார். இதனால் மெக்காவில் இருந்து 450 கி.மீ., துாரத்திலுள்ள மதீனாவுக்கு அவர் குடிபெயர வேண்டியதாயிற்று. அங்கு அவரை ஆதரிக்கும் மக்களின் எண்ணிக்கை பெருகியது. இதன்பிறகு பல யுத்தங்கள் செய்து, மெக்கா நகர மக்களையும் இஸ்லாமை ஏற்று கொள்ள செய்தார். நாயகம் மிகுந்த பணிவுடையவர். பிறரது துன்பத்தை நீக்குவதில் அக்கறையுள்ளவர். அவர் 63 வயது வரை வாழ்ந்தார். கி.பி. 632 ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதி இவ்வுலகைத் துறந்தார். அவர் பிறந்ததும், இறந்ததும் ஒரே நாளே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளையே மிலாடி நபி என்ற பெயரில் கொண்டாடி வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !