காலபைரவர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3062 days ago
அரூர்: அரூர் சந்தைமேட்டில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அருகே, புதிதாக கட்டப்பட்ட காலபைரவர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் துவங்கியது. விழாவையொட்டி, மங்கல இசை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. இதையடுத்து, பெண்கள் வர்ணீஸ்வரர் கோவிலில் இருந்து முளைப்பாரி முற்றும் தீர்த்தகுடத்தை ஊர்வலமாக எடுத்து வந்தனர். விழாவின், முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. அதிகாலையில், 64 வகையான பைரவ ஹோமம் நடந்தது. பின், யாக சாலையில் கலசத்தில் வைக்கப்பட்ட புனித நீரை, கோவில் கலசத்தின் மீது சிவாச்சாரியார்கள் ஊற்றினர். பின், மூலவருக்கு புனித நீர் ஊற்றி, பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாரதனை காண்பிக்கப்பட்டது.