புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா
ஈரோடு: புனித அமல அன்னை ஆலய தேர் பவனியில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு, புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா, கடந்த, 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து எட்டு நாட்கள், சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நடந்தது. விழாவின் முக்கிய அம்சமான, ஆடம்பர திருவிழா திருப்பலி, நேற்று முன்தினம் இரவு நடந்தது. கோவை மறை மாவட்ட ஆயரின் செயலாளர் ஆல்பர்ட் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வேண்டுதல் ஆலயத்தை சுற்றி, தூய அமல அன்னை சப்பர பவனி நடந்தது. கோஷம் எழுப்பியபடி, கிறிஸ்தவர்கள் சப்பரத்தை தோளில் சுமந்து சென்றனர். இதை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதா சொரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, உப்பு, மிளகு தூவி வழிபட்டனர். தேர் ஆலயத்தை அடைந்தவுடன், நற்கருணை ஆராதனையுடன் விழா முடிந்தது.