சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள்
ADDED :3051 days ago
சென்னை: சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக, ஜன., முதல், கூடுதல் பஸ்களை இயக்க, தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. கேரளாவின், பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள, அய்யப்பன் கோவிலுக்கு, தமிழகத்தில் இருந்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். கார்த்திகை முதல், தை வரை, 45 நாட்கள் விரதமிருந்து செல்வோரும், நேரடியாக செல்வோரும் அதிகம் உள்ளனர். அவர்களின் வசதிக்காக, அரசு விரைவு போக்குவரத்து கழகம், சென்னை, திருச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து, பம்பா வழியாக செல்லும் வகையில், நவ., 15 முதல், 25 மிதவை சொகுசு பஸ்களை இயக்குகிறது. ஜன., முதல், அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கூடும் என்பதால், கூடுதலாக, 10 பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.