பொருள் புரியாமல் மந்திரம் ஜெபித்தால் உண்டாகும் பலன் என்ன?
உடல்நிலை சரியில்லை என்றால் டாக்டரிடம் சென்று சொல்கிறோம். அவர் மருந்து எழுதித் தருகிறார். அதை வாங்கி சாப்பிடுகிறோம். நோயும் குணமடைகிறது. என்ன மருந்து எழுதியிருக்கிறார் என்பது டாக்டருக்கும், மருந்து கடைக்காரருக்கும் மட்டுமே புரியும். நமக்குப் புரிவதில்லை. அந்த மருந்து எப்படி தயாரிக்கப் படுகிறது என்றெல்லாம் நாம் ஆராய்வதில்லை. நோய் குணமடைகிறதா என்பது தான் முக்கியம். இதுபோலவே, மந்திரங்களையும் ஏழு வயதிலேயே உபதேசம் செய்து விட வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. அந்த வயதில் புரியுமா? பொருளைப் புரிய வைக்க வேண்டும் என சாஸ்திரமும் கூறவில்லை. மந்திரத்தை மனதில் பதிய வைப்பது உபதேசம். அதை மனதிற்குள் சொல்வது ஜபம். எனவே, இது விஷயத்தில் மனம் முக்கிய இடம் பெறுகிறது. மந்திரம் என்பதன் பொரு ளும் இதையே குறிக்கிறது. மனனம்+ த்ராயதே= மந்திரம். ‘மனதில் இறைவனை எண்ணி ஜபிப்பவர்களைக் காப்பதே’ மந்திரம். ‘மணி மந்திரம் ஔஷதம்’ என்பர். அதாவது, மந்திரம் என்பது மனதுக்கு சிறந்த மருந்து. இதன் பொருள் புரிந்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.