காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் தேரோட்டம்
ADDED :2815 days ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் உலகளந்தபெருமாள் கோவில், தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் உலகளந்தபெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலின் தை மாத பிரம்மோற்சவம், 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.உற்சவத்தையொட்டி, தினமும் காலை, மாலையில், பல வாகனங்களில், பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூன்றாம் நாள் உற்சவம், 24ம் தேதி காலை நடந்தது. ஏழாம் நாள் உற்சவமான நேற்று தேரோட்டம் நடந்தது.இதையொட்டி, காலை, 5:30 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன்பின், காலை, 7:45 மணிக்கு, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேர் புறப்பட்டது. நான்கு ராஜ வீதிகளிலும், ஏராளமான பக்தர்கள் தேரில் வந்த பெருமாளை பக்திபரவசத்துடன் வழிபட்டனர்.