சாய்பாபா கோவில்களில் பாலாபிஷேகம்
திருத்தணி:ஷீரடி சாய்பாபா கோவில்களில், பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன. திருத்தணி ஒன்றியம், கே.ஜி. கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று, மூலவருக்கு பாலாபிஷேக உற்சவ விழா நடந்தது. விழாவையொட்டி, அதிகாலை,5:00 மணிக்கு, சுப்ரபாதம், காலை, 5:30 மணிக்கு காகட ஆரத்தி நடந்தது.தொடர்ந்து, மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்தனர். பகல், 12:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில், சந்திய ஆரத்தி மற்றும் சேஜ் ஆரத்தி நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள, பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர். அதே போல், நகரி பகுதியில் உள்ள சாய் பாபா கோவிலிலும், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.