உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறிய சேவை பெரிய நன்மை

சிறிய சேவை பெரிய நன்மை

ஒரு சிறிய சேவை, பெரிய நரகத்தில் இருந்து உங்களை காப்பாற்றும். அதற்கு உதாரணம் ஹஜ்ரத் மாலிக் இப்னு தீனார் (ரஹ்) என்பவரின் வரலாறு. இவர் ஒரு மகான். சிப்பாயாக பணி புரிந்த தீனார், இளமையில் கெட்ட வழக்கங்கள் கொண்டவராக இருந்தார். போதையில் உழன்ற அவர் ஒரு அடிமை பெண்ணுடன் உறவு வைத்திருந்தார். அவளுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் மீது தீனாருக்கு அளவு கடந்த பாசம். தீனார் மது அருந்த ஆரம்பித்ததும், அந்தக் குழந்தை கோப்பையை பிடுங்கி அவர் மீது ஊற்றி விடும். அதன் மீது கொண்ட அன்பால் அவர் குழந்தையை திட்டுவதில்லை. குழந்தைக்கு இரண்டு வயதானபோது, திடீரென இறந்து விட்டது. குழந்தையின் மரணம், தீனாரை கடுமையாக பாதித்தது.

ஒரு ஷாபான் மாதத்தின் 15ம் நாள்... அந்த நாளில் தொழுகை முக்கியம். அன்று இரவில் அளவுக்கதிகமாக குடித்த, தினார் தொழாமலேயே உறங்கி விட்டார். கனவு வந்தது. அந்த கனவில், தினாரின் இறுதிக்காலம் நெருங்கி விட்டது. அவர் இறந்தவர்கள் நுழையும் ‘மஹஷர்’ என்ற மைதானத்தில் நுழைந்த போது பெரும் சப்தம் எழுந்தது. தினார் திரும்பி பார்த்தார். ஒரு கருநாகம் அவரை விரட்டியது. தினார் பயந்து ஓடினார். பாம்பு துரத்தியது. அப்போது வெண்ணிற உடை அணிந்த ஒரு பெரியவர் வந்தார்.

அவரிடம், “எனக்கு உதவி செய்யுங்களேன்,”என்றார் தினார்.அந்த பெரியவர், “அது மிகவும் வலிமை மிக்கது. அதை எதிர்க்குமளவுக்கு என்னிடம் சக்தி இல்லை. இதோ! அந்த மலை மீது ஏறு. ஒருவேளை தப்பிக்கலாம்,” என சொல்லி விட்டு போய் விட்டார். தினார் மலையில் ஏறினார். அங்கே நரகம் இருந்தது. அதன் விளிம்பை தொட்டபோது, “நீ பின்னால் போ! நீ... நரகவாசிகளில் ஒருவன் அல்ல,” என்று ஒரு குரல் கேட்டது. திரும்பி ஓடினார் தினார். பாம்பும் விடாமல் துரத்தியது. மீண்டும் அந்த பெரியவர் எதிர்ப்பட்டார். இப் போதும் அவரிடம் தன்னை காப்பாற்ற வேண்டினார் தினார். அவர் அழுதபடியே, “நான் பலவீனமானவன். உன்னை என்னால் காப்பாற்ற இயலாது. எதற்கும் இதோ தெரியும் இன்னொரு மலை மீது ஏறு,” என்று சொல்லிவிட்டு போய் விட்டார். தினார் அந்த மலை மீது ஏறினார்.

அம்மலையில் கதவுகளும், திரைகளுமாய் இருந்தன. அதில் ஏறியதும் “கதவைத் திறங்கள், திரைகளை விலக்குங்கள். இதோ, ஓடி வரும் இந்த மனிதன் செய்த நல்ல செயல்களில் பலன் இங்கே ஏதாவது இருக்கலாம், அது இவருக்கு அபயமளிக் கலாம்,” என்றனர்  இறைவனுக்குரியவர்கள். அதன்படி கதவுகள் திறக்கப்பட்டன. உள்ளிருந்து பல குழந்தைகள் வந்தனர். அவர்களில் தினாரின் இறந்து போன மகளும் இருந்தாள். அவள் தினாரைக் கண்டதும், “இறைவன் மீது சத்தியமாக இவர் என் தந்தை,”என்றாள். தினார் அவளை அணைத்து கொண்டார். அவள் தன் தந்தையை துரத்தி வந்த பாம்பை துரத்தியதும் அது ஓடிவிட்டது. தினார்  தன்  மகளிடம், “என்னைத் துரத்திய பாம்பு எங்கே?” என்றார். “தந்தையே! அது நீங்கள் செய்த பாவத்தின் வடிவம். அதுவே பாம்பாய் வடிவெடுத்து உங்களை துரத்தியது,” என்றாள். “நான் பார்த்த முதியவர் யார்?” என்றதும், “அவர் உங்களின் நற்செயல்களின் வடிவம். இருந்தாலும், உங்களின் பாவச் செயல்கள், நீங்கள் செய்த நல்லதை பலவீனமாக்கி
விட்டது. இருப்பினும், அந்த நல்ல செயல்கள் பாவத்தில் இருந்து தப்பிக்கும் வழியை உங்களுக்கு காட்டியது,” என்றாள். “நீங்கள் இந்த மலையில் என்ன செய்கிறீர்கள்?” என்ற தினாரின் கேள்விக்கு, “நாங்கள் உங்களின் இறுதிக்காலம் வரும் வரை இங்கே காத்திருப்போம். நீங்கள் மைதானத் திற்குள் நுழைந்தவுடன், நாங்கள் அல்லாஹ்விடம் உங்களுக்காக சிபாரிசு செய்வோம்,” என்றாள். கனவு கலைந்து எழுந்தார் தினார். அதன் பிறகு தீய பழக்கங்களை விட்டு மகான் ஆனார். ஒரு சிறு நன்மை கூட நம்மை நரகத்தில் இருந்து காப்பாற்றி விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !