மகரம் வாகனத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் உலா
ADDED :3093 days ago
காஞ்சிபுரம் : காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ இரண்டாம் நாள், நேற்று காலையில், மகரம் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, நான்கு மாடவீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம், நேற்று முன்தினம் காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் காலை, வெள்ளி விருஷபம் வாகனத்திலும், இரவு தங்க மான் வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி, வீதியுலா சென்றார். நேற்று காலை, 8:00 மணிக்கு, புதிதாக செய்யப்பட்ட மகரம் வாகனத்தில் எழுந்தருளினார். சன்னதி தெரு வழியாக, நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காமாட்சி அம்மன் முன்னால் செல்ல, வேத விற்பன்னர்கள், வேதபாராயணம் பாடியபடி, பின் சென்றனர்.