அவிநாசி தேர்த்திருவிழா ஏப்., 27ல் தேரோட்டம்
திருப்பூர்: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 20ல் துவங்கி மே 1ம் தேதி வரை நடக்கிறது. தேரோட்டம், ஏப்., 27ம் தேதி நடக்கிறது. கொங்கு ஏழு சிவாலயங்களில் ஒன்றானதும், ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனாரால், தேவார பாடல் பெற்ற தலமாகவும், தமிழகத்தில், மூன்றாவது பெரிய தேர் கொண்டதுமான, அவிநாசி, கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், சித்திரை தேர்த்திருவிழா விமரிசையாக நடக்கும். இந்தாண்டு, தேர்த்திருவிழா, ஏப்.,20ம் தேதி, காலை, 8:00க்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
அன்று இரவு, திருமுருகநாதர் அவிநாசி கோவிலுக்கு வருகை தரும் நிகழ்ச்சி நடக்கிறது. 21ம் தேதி, சூரிய சந்திர மண்டல காட்சிகள்; 22ம் தேதி, பூத வாகனம், அன்னவாகனம், அதிகார நந்தி, கிளி வாகனங்களில் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 23ம் தேதி, புஷ்ப பல்லக்கு, கைலாச வாகன காட்சிகள்; 25ம் தேதி, கற்பக விருட்ஷ வாகனம், சுவாமி திருக்கல்யாண உற்சவமும், தொடர்ந்து, யானை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். விழாவில், 26ம் தேதி, அதிகாலை பூரம் நட்சத்திரத்தில், பஞ்சமூர்த்திகளும் தேர்களுக்கு எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். 27ம் தேதி, காலை, பெரிய தேரும், 28ம் தேதி, அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் தேரோட்டமும் நடக்கிறது. அதே தினம், இரவு வண்டித்தாரை, பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. 29ம் தேதி, தெப்பத்தேர், 30ம் தேதி, ஸ்ரீ நடராஜர் தரிசனம், மே 1ம் தேதி, மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.