திருக்கழுக்குன்றத்தில் பவுர்ணமி விழா விமரிசை
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், பவுர்ணமி கிரிவலம் ஊர்வலம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிரதான கிரிவலம் ஊர்வலம் நடைபெறும் திருத்தலமாக திருக்கழுக்குன்றம் விளங்குகிறது. திருமணம் கைகூடுதல், வாழ்வு வளம் பெறுதல், குழந்தைப்பேறு உள்ளிட்டவை நிறைவேற, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாதந்தோறும், பவுர்ணமி நாளில் கிரிவலம் வருகின்றனர். கடந்த மாதம், பவுர்ணமி சந்திர கிரகணத்துடன் வந்ததால், கிரிவலம் வந்த பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. நேற்று மாசி மகத்துடன் கூடிய பவுர்ணமி என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இதை ஒட்டி, வேதகிரீஸ்வரர் கோவிலில் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள திருமலை சொக்கம்மன் கோவில், சித்தி புத்தி விநாயகர் கோவில், அரசடி விநாயகர் கோவில் மற்றும் பக்தவச்சலேஸ்வரருடன் வேதகிரீஸ்வரரை வழி பட்டனர்.