கோட்டை மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
ADDED :2974 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிதிருவிழாவில் 3 ஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிப்பெருந் திருவிழா பிப்.,2 ம் தேதி முதல் நடந்து வருகிறது. சாட்டுதல், கொடியேற்றம், அம்மன் வீதி உலா நிகழ்வுகள் நடந்து வருகிறது. பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த காப்பு கட்டி, விரதம் இருந்து பால்குடம், முளைப்பாரி எடுத்தல், அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். நேற்று கோயில் வளாகத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்வு நடந்தது. 16 அடி நீளம், 5 அடி அகலத்தில் குழி வெட்டி அக்னி வளர்த்தனர். பரம்பரை அறங்காவலர் சண்முக முத்தரசப்பன் துவக்கி வைத்தார். காலை 6:00 முதல் 9:00 மணிவரை 2,970 பேர் பூக்குழி இறங்கினர். இரவு தேரோட்டம் நடந்தது. நாளை தசாவதாரம் நிகழ்ச்சி நடக்க உள்ளது.