தஞ்சை பெரிய கோவிலில் ரூ.100 கோடி சிலைகள் மாயம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில், 100 கோடி ரூபாய் மதிப்பிலான ராஜராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகமாதேவியார் சிலைகள் மாயமானது குறித்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவிலில், 1,000 ஆண்டு கள் பழமை வாய்ந்த, 13 பஞ்ச லோக சிலைகள் இருந்தன. இதில், விலை மதிப்பில்லாத ராஜராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகமாதேவியார் சிலைகள் பல ஆண்டுகளுக்கு முன் மாயமாகின. விசாரணையில், அந்த சிலைகள் குஜராத்தில் உள்ள தனியார் மியூசியத்தில் இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக, நேற்று, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், தஞ்சை, எஸ்.பி.,செந்தில்குமார் ஆகியோர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
எஸ்.பி., செந்தில்குமார் கூறியதாவது: இரு சிலைகளும், 50 ஆண்டுகளுக்கு முன், கோவிலில் இருந்து திருடப்பட்டுள்ளதாக தெரிகிறது. விசாரணை அடிப்படையில், தஞ்சை மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றி யுள்ளோம். இனி, அவர்கள் விசாரிப்பர். பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட ராஜராஜ சோழன் சிலை, லோகமாதேவி சிலைகள் மிக முக்கியமானவை. இவற்றின் மதிப்பு, 100 கோடி ரூபாய். ராஜராஜ சோழன் சிலை, 60 கோடி ரூபாயும், லோகமாதேவி சிலை, 40 கோடி ரூபாயும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.