உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நிறைவு

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நிறைவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவில், மூன்று நாட்களாக நடந்த வெள்ளித் தேரோட்டம் நேற்று நிறைவு பெற்றது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம்,13ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, கோவிலில் காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

கடந்த மாதம், 20ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும்; கடந்த, 2ம் தேதி பூவோடு வைத்தல் நிகழ்ச்சி துவங்கி நடைபெற்றன. கடந்த, 3ம் தேதி கோவில் வளாகத்தில் கொடியேற்றப்பட்டது. கடந்த, 7ம் தேதி, 12 அடி உயரமுள்ள மரத்தேரில் விநாயகரும்; 21 அடி உயரமுள்ள வெள்ளித் தேரில் மாரியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவிலிலிருந்து வடம் பிடிக்கப்பட்ட தேர், வெங்கட்ரமணன் வீதியில் முதல் நாள் நிலை நிறுத்தப்பட்டது. கடந்த, 8ம் தேதி, தெப்பக்குளம் வீதியில் இரண்டாம் நாள் நிலை நிறுத்தப்பட்டது.தேர் சக்கரத்துக்கு, பக்தர்கள் உப்பு, மிளகு கொட்டி, நேர்த்தி கடன் செலுத்தினர். நேற்று, தெப்பக்குளம் வீதி வழியாக வடம் பிடிக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் தேர் நிலைக்கு சென்றது. தொடர்ந்து, பரிவேட்டை, தெப்பத்தேர் வைபவம் நடந்தது.இன்று, அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு, 9:00 மணிக்கு கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 12ம் தேதி இரவு, 8:00 மணிக்கு மகா அபிேஷகமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !