மழை வேண்டி.. சீர் வரிசையுடன் நடந்த அரசு - வேம்பு திருமணம்
அனுப்பர்பாளையம்: மழை பெய்ய வேண்டி, காவிலிபாளையம் புதூரில், அரசு - வேம்பு மரங்களுக்கு திருமண வைபவம் நடந்தது. திருப்பூரை அடுத்த காவிலிபாளையம் புதூரில் உள்ள செல்வ விநாயகர் மற்றும் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், கடந்த மாதம் நடந்தது.
கோவிலில் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று, மழை பெய்யவும், தொழில் வளம் சிறக்கவும், திருமணம் கைகூட வேண்டியும், 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரசு வேம்பு மரங்களுக்கு திருகல்யாணம் நடந்தது. முன்னதாக, மாப்பிள்ளை வீட்டார் (அரசு), பெண் வீட்டார் (வேம்பு), பட்டு வேஷ்டி, பட்டு சேலை, பழங்கள், இனிப்பு வகைகள், வளையல் உள்ளிட்ட சீர் வரிசைகளுடன், மேளதாளங்கள் முழங்க, ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். அரசு மற்றும் வேப்ப மரத்துக்கு, சந்தனத்தில் உருவம் வரையப்பட்டு, உடை உடுத்தி, சிறப்பு பூஜைகள் நடந்தன. சிவாச்சார்யார்கள் வேத மந்திரம் முழங்க, அரசு வேம்பு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, 108 சங்கு பூஜை, சங்காபிஷேகம், மதியம் 1:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.