விருதுநகர் மாரியம்மன் கோயில் விழா: கொடியேற்றத்துடன் துவங்கியது
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில்விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல்விழா ஏப்.8 ல் நடக்கிறது. நேற்று இரவு 8.01 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா கமிட்டியினர் முன்னிலையில் யாகம் நடத்தப்பட்டு அம்மனின் வாகனமான சிங்கம் படம் போட்ட கொடி ஏற்றப்பட்டது. இவ்விழாவில் வள்ளி திருமணம் நாடகம், இரவு 10 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் அம்மன் நகர் வலம் வருதல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப். 8 ல் நடக்கிறது. ஏப். 9 ல் பக்தர்கள் கயிறு குத்து, அக்னி சட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், வேடங்கள் போட்டு நேர்த்தி கடன் செலுத்துதல் நடக்கிறது. ஏப்.10 ல் மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அடுத்தநாள் காலை 7 மணிக்கு தேர் நிலை வந்தடைதல், அதற்கடுத்த நாள் மஞ்சள் நீராட்டு நடக்கிறது. விழா நாட்களில் அம்மன் நகர் வலம் வருதல், கலை நிகழ்ச்சி நடக்கும். விழாவையொட்டி கே.வி.எஸ். மேல்நிலை பள்ளி மைதானத்தில் பொருட்காட்சி ஏப்.22 வரை நடக்கிறது. ஏற்பாடுகளை விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானத்தினர் செய்து வருகின்றனர்.