கந்தசுவாமி கோவிலில் கொடிமரம் நடப்படுமா?
ADDED :3063 days ago
செய்யூர் : கந்தசுவாமி கோவிலில் சாய்ந்த கொடிமரம் மீண்டும் நடப்படுமா என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். செய்யூரில் உள்ள, பெருமை வாய்ந்த கந்தசுவாமி கோவிலை, அறநிலையத் துறையினர் கண்டு கொள்வதில்லை என, ஆன்மிக அன்பர்கள் புகார் கூறுகின்றனர்.ஏராளமான பக்தர்கள் வரும் இக்கோவிலை, சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.இங்குள்ள கொடிமரம், செப்., மாதம் வீழ்ந்தது. பங்குனி உத்திரத் திருவிழாவின் போது, கொடிமரம் அமைக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அறநிலையத் துறை நிர்வாகம், இதுவரை கண்டுகொள்ளவில்லை. இது, ஆகம விதிகளுக்கு எதிரானது. எனவே, கொடிமரத்தை மீண்டும் புதிதாக நட வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.