அவிநாசியில் அடித்த காற்று தேர் அலங்கார துணி சேதம்
அவிநாசி: அவிநாசியில், பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ததால், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர் அலங்கார துணிகள் சேதமடைந்தன. திருப்பூர், அவிநாசி, பல்லடம் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, பலத்த காற்றுடனும், இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால், ரோடுகள், வணிக வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த, விளம்பர தட்டிகள், பிளக்ஸ் பேனர்கள், கீழே சரிந்தன. பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்ததில், மின் தடை ஏற்பட்டது. இதனால், இரவு முழுவதும் பெரும்பாலான இடங்களில் மின் தடை ஏற்பட்டது. அவிநாசியில், தேர்த்திருவிழாவுக்கு, ஏராளமான பிளக்ஸ் பேனர்கள், பஸ் ஸ்டாண்ட் மற்றும் தேர் வீதிகளில் வைக்கப்பட்டிருந்தன. பல இடங்களில், இந்த பேனர்கள் சாய்ந்தன. பலத்த காற்றுக்கு, பெரிய தேர் அலங்கார துணிகள் சேதமடைந்தன. ஒன்றரை மணி நேரம் பெய்த கன மழைக்கு, விவசாய நிலங்கள் மற்றும் சிறிய குட்டைகளில், மழை நீர் தேங்கியது.