திருவள்ளூரில் சதுர்த்தி நாயகனுக்கு சிறப்பு அபிஷேகம்
திருவள்ளூர்:சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயக பெருமானுக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
பவுர்ணமி அடுத்து வரும் சதுர்த்தி விழா, விநாயக பெருமானுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.
நேற்று (மே 3)ல், சதுர்த்தியை முன்னிட்டு, திருவள்ளூர், ரயிலடி வழித்துணை விநாயகர் கோவில், ஆயில் மில் அரச மரத்தடி விநாயகர் கோவில், தீர்த்தீஸ்வரர் கோவிலில், வரசித்தி விநாயகர் கோவில், பூங்கா நகர், சிவ -- விஷ்ணு கோவிலில் உள்ள செல்வ விநாயகர் கோவில் ஆகிய கோவில்களில் விநாயகருக்கு, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
திருவள்ளூர், பெரியகுப்பம், மீனாட்சி நகரில், காரிய சித்தி கணபதி கோவிலிலும், ஜெயா நகர் விஸ்தரிப்பில், மகா வல்லப கணபதி கோவிலில், கணபதி ஹோமங்கள் நடைபெற்றன.
திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலில் உள்ள, 11 விநாயகர்கள் கொண்ட விநாயகர் சபையிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சோழவரம், பஞ்சேஷ்டி அருகே, நத்தம் கிராமத்தில், வாலீஸ்வரர் கோவிலில், காரிய சித்தி கணபதி சன்னதியில் சங்கட நிவாரண ஹோமம், சிறப்பு அலங்காரத்துடன், மதியம் மகா தீபாராதனையும் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள், அருகம்புல் மாலை அணிவித்து, விநாயகரை வழிபட்டனர்.