சரஸ்வதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
திருவாரூர்: கூத்தனுார் மகா சரஸ்வதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, கூத்தனுாரில் அமைந்து உள்ளது, மகா சரஸ்வதி அம்மன் கோவில். தமிழகத்தில், சரஸ்வதிக்கு என, தனி கோவில் இருப்பது இங்கு தான்.இக்கோவிலில் அருள்பாலிக்கும் சரஸ்வதி அம்மனை வழிபட்ட ஒட்டக் கூத்தன், கவி பாடும் திறனை பெற்று, சோழ மன்னர்கள் காலத்தில், கவிச்சக்கரவர்த்தி பட்டத்தை பெற்றார் என்பது வரலாறு.
அப்போது, இரண்டாம் குலோத்துங்க சோழனின் நன்மதிப்பை பெற்ற ஒட்டக்கூத்தனுக்கு, இக்கிராமத்தை, பரிசாக அளித்துள்ளார். ஆதலால், இவ்வூர் ஒட்டக்கூத்தனுார் என்ற பெருமை பெற்று, தற்போது, கூத்தனுார் என, அழைக்கப்படுகிறது.அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், 2003ல் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த, 2017 பிப்., 6ல், பாலாலயம் நடந்து, திருப்பணிகள் துவங்கின. நன்கொடையாளர்கள் அளித்த, 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் முடிந்து, ஜூலை, 1ல், மகா கும்பாபிஷேகம் என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, கும்பாபிஷேக விழா, ஜூன், 24 அதிகாலை, 4:30 மணிக்கு, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கின. 27ம் தேதி, யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து, ஏழுகால பூஜைகள் முடிந்து, நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, எட்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது.காலை, 9:30 மணிக்கு கடங்கள் புறப்பட்டு, 10:00 மணிக்கு, மூலஸ்தான கோபுரம் மற்றும் ராஜகோபுரத்தில், சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்ற, மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, செயல் அலுவலர், வெங்கட கிருஷ்ணன் மற்றும் அறங்காவல் குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.